Wednesday, June 1, 2011

இன்று பெய்த மழை!

எனைச் சுற்றி மௌனம்
மழையோடு அந்தி வானம்
தேன் கலந்த கள்ளாய்
மனம் நனைத்தது

நான் கடந்து வந்த
நாள் திரும்பி வந்து - நான்
நனைய மறந்து போனதை
நினைவில் சொன்னது

காய்ச்சலுக்கு ஆசை
கம்பளிக்கு ஆசை
காரணங்களின் கருவூலத்தில்
காளான் நின்றது - அதில்
வண்ணத்துப் பூச்சி ஒன்று
வந்து மொய்த்தது

விடுப்பு மடல் எழுதி
தட்டி விட்டேன் மனப் புழுதி
பொய் சொன்ன நிறைவு
மீண்டும் என் இதழோரம்

மறக்காமல் இவை செய்துவிட்டு
வெளிப்பூட்டு தாள் போட்டுவிட்டு
மன வானின் முதல் மேகம் தொட்டுக்
கவிதை செய்த நொடியில்
மழைத் துளியொன்று எனக்காக
வந்து விழுந்தது மடியில்
 என்றும் இல்லாத மெல்லிசையும்
இருந்தது இடியில்!

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

No comments:

Post a Comment