Friday, July 16, 2010

கவிதையின் கவிதை

எண்ணும் எழுத்தும் கண் - என

உண்டொரு செந்தமிழ்ப் பண் - இன்று

கவிதைகள் பிறப்பது பெண்களின் கண் - இதைச்

சகியுமோ என் தமிழ் மண்?!

சக்தியை இழக்குது சொல்

சமுதாயத்தை மாற்றிடும் இலக்கொன்று கொள்!

இலக்கில்லாத இலக்கியம் இல்

வெறும் காதலை இலக்கென கொள்ளாமல் நில்

பாதைகள் வகுத்துச் செல்

பல நன்மைகள் எழுத்தாலே ஆக்கிடக் கல் - இது

கவிதையின் கனிவான சொல்

தமிழை மதித்தால் எந்தன் சொல் வழி செல்!

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

நிறைமதிக் குறள்

பார்த்த இரவு
பழகிய நிலவு
பார்த்துப் பழகிய நிழல்!
என் காலில் விழுந்த நிழல் கேட்டது
நிறைமதி மேலொரு குறள்!

முற்றம் தோன்றா நிறைமதி முற்றம்
கொள்ளும் மதியின் பெயர்

அகர முதலும் ஆகும் நிறைமதி
காதல் வளர் கவிக்கு

தோன்றா நிறைமதி பாடாக் கவிதைகள்
வாழா மதியிலி வான்

ஒற்றை நிறைமதி மல்லிகை ஏந்தும்
கற்றைக் குழல் இரவு

ஊட்டும் அமுதும் காட்டும் நிறைமதி
சேய்க்கு தாயது வாம்

பாரா ரோகம் தீர்க்கும் நிறைமதி
மாண்பார் செந்தமிழ்ப் பெண்

தேயா நிறைமதி யில்லை தேய்ந்தும்
தேயா நெடு நெஞ்சத்துள்

எத்தனை நூற்றும் தீரா நிறைமதி
கண்ணன் ஈந்த துகில்

ஏக்கம் தாக்கம் தருமாம் நிறைமதி
ஆக்கும் கவிதைத் தொழில்

மதிநிறை நிறைமதி தேயா நெஞ்சத்துட்
தமிழும் தீர்வது இல்

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

Thursday, July 15, 2010

திரைகடல் ஓடி...

உறுமீன் வருமென்று காத்திருந்து
இளமை தொலைக்கும் கொக்குகள்
திரவியம் தேடி கூடு சேர்கையில்
அழைத்தது குழந்தை...
வாங்க தாத்தா!