Tuesday, December 9, 2008

முழுமதி அவளது முகமாகும்...மெட்டில் பல்லவி...இதோ!

கனவின் வானில் ஊர்வலமா?
மனதில் கானல் கார்வலமா?
இதழ்கள் பூப்பதை விழியில் மறைக்கிறாய் பெண்ணே
பூ உன் வாசம்
சிறை வாசம் செய்வதேன் கண்ணே
இயல்பாய் காற்றை சேர்ந்துவிடு
எந்தன் சுவாசத் தூது இது...
சிறு அரும்பே பூவாய் மாறும் நேரம் இது...

Tuesday, November 18, 2008

விழியில்...

இமைவிட்டு நழுவியதும்
இதழால் பிடித்தேன், மொழியானாள்
அவளை வரைந்த தூரிகையின்
ஒரு துளி குடித்தேன், உயிரானாள்

இல்லாத மொழி ஒன்று
நா பேச துவங்கியதும்
தள்ளாடும் நெஞ்சினிலே
மதி மழை விழுகிறதே!

அவள், உயிருக்குள் குளிராக
காதல், சுடும் வெய்யில் கதிராக
இரு துருவத்தின் வானிலையும்
என்னுள்ளே சதிராட

காதல் காதல் காதல் ...
என் உயிரும் மரணமும் ஆகியதே!

Tuesday, October 21, 2008

முன்பனிக்காதல்

குளிர்பிறையின் கூர்நுனியில்
பனித்துளியாய் நின்றிருந்தேன்
அல்லி அவள் மடியினிலே
விழுவதற்காய் தவமிருந்தேன்
இரவின் வெளி என் மனதின் தாகத்தில் தீ வார்க்க,
பிறை வெளிச்சம் போதவில்லை
என்னவளின் முகம் பார்க்க…
மொட்டாய் நின்றவள் மலர்ந்தாள்
தன் இதழ்களை திறந்தாள்
மின்னல் கொடியினில் இறங்கி
அவள் மனதினில் நிறைந்தேன்