Tuesday, September 16, 2014
Tuesday, August 26, 2014
பழகிய மனித கூட்டம்
கபடதாரிகள்
நாடகத்தில்
உண்மையாளன்தான்
கோமாளி
அவன் சொல்லும்
உண்மைக்கு
சிரித்தே பழகிய மனித
கூட்டம்தான் ஏமாளி!
அவன் விழுவதைப்
பார்த்து
சிரிக்கும்
கூட்டத்தின் கருத்தில்
அது பொழுதுபோக்கு!
இது விதையில்
சிதையுண்டு
வளர்ந்து நிழலாடும்
உலுத்து நிற்கின்ற தேக்கு
அவன் விழுந்தும்
எழுகிறான்
இவன் சிரித்து
விழுகிறான்
இது மனித மந்திகளின்
குறை மதிச்
சிந்தையின் நீட்சி
பிறன் வலியில் அகமகிழ்ந்து
உழன்று கிடப்பதே
மனித இனத்தின் பெரும் வீழ்ச்சி!Wednesday, August 20, 2014
புகையின் படிமம்
தழல் மேடையில்
எழில் நாடகம் எரிகின்றது!
நிழல் ஆடிட
விழல் நெஞ்சமும் தகிக்கின்றது!
ஒளி வேம்பிலே கரு
நாகம்
நுனிக் கொம்பிலே
நடமாடும்
குடுவையின்
விளிம்பில் விஷம்
அமுதில் கலந்திடும்
பயம்
மூச்சின் வெப்பம் குறைய
உள்ளம் கல்லாய் உறைய
கலங்கிய கடலில்
எரியும் கற்பூரமாய் –
ஒரு
உயிரின்
தள்ளாட்டம்...
இது யுகத்தில் படிந்த
புகையின் படிமம்
உருவெடுக்கும்
வெள்ளோட்டம்!
Saturday, June 7, 2014
போகாத மரணம்!
ஓலம் கண்ணீர் மௌனம்
ஒருபுறம்
புன்னகை களிப்பு கேளிக்கை
மறுபுறம்
இதற்கிடையில் கிடக்கும்
பிணத்தைப் போலே
விசும்பும் உண்மை
மனம்!
யார் இறப்பிற்கோ
சென்று வந்து
தலை முழுகிடும் உடல்
உடன் மறந்திடும் மனம்
சிந்திய கண்ணீர்
காயும் முன்னே
எரியும் வயிற்றின்
புகையில் மறையும்
காற்றில் பறக்கும் கிழவனின்
சிதையாய்
தொலைந்து போகும் உறவின்
நிழல்கள்
உண்ட நஞ்சு
உள்ளிருந்து
ஊறி ஊறிப் புகை எழுப்ப
உறைந்துவிட்ட மனதின் ரணம்
மரணம்!
மொய்க்கும் ஈயை தட்டும் கைகள்
மறுக்கின்றன மரணத்தை!
Tuesday, March 11, 2014
ரணப் பிரசவம்
நுரைகள் கூடி கேலி செய்தன என் நிஜத்தை
என் நிஜம் ஒளிந்து கொண்டது என் நிழலுக்குள்
ஒவ்வொரு துளியாய் வானம் விதைத்தது எனைத் தேடி
என் தொப்புள் கொடி சுற்றி இறந்து கிடந்தேன் என்னுள்ளே
ஒரு மின்னல் வந்து செய்து வைத்தது ரணப் பிரசவம்
என் சாம்பலில் இருந்தே எழுந்தேன் வாய்மை ஒளியோடு
நுரைகள் தெரித்துக் கலைந்தன என் நிழல் பார்த்து
என் நிஜத்தை அணைத்து உயர்த்தியது ஒரு மழை மேகம்
கலந்தேன் முகிலில் துளியாக - என்
வாய்மை ஒளியோடு - இனி
பொழிவேன் புவி மேல் தவறாமல் - என்
ஆன்மத் தமிழோடு!
என் நிஜம் ஒளிந்து கொண்டது என் நிழலுக்குள்
ஒவ்வொரு துளியாய் வானம் விதைத்தது எனைத் தேடி
என் தொப்புள் கொடி சுற்றி இறந்து கிடந்தேன் என்னுள்ளே
ஒரு மின்னல் வந்து செய்து வைத்தது ரணப் பிரசவம்
என் சாம்பலில் இருந்தே எழுந்தேன் வாய்மை ஒளியோடு
நுரைகள் தெரித்துக் கலைந்தன என் நிழல் பார்த்து
என் நிஜத்தை அணைத்து உயர்த்தியது ஒரு மழை மேகம்
கலந்தேன் முகிலில் துளியாக - என்
வாய்மை ஒளியோடு - இனி
பொழிவேன் புவி மேல் தவறாமல் - என்
ஆன்மத் தமிழோடு!
Subscribe to:
Posts (Atom)