Friday, May 13, 2011

அந்தித் தேன் சிந்தித்தேன்

என் கவிதைகள் பெரும்பாலும் என்னைச் சுற்றி கிடப்பவையே! அதிலும் இயற்கை என் மனதையும் கொள்ளை கொள்ளும் ஒரு மாயம்! அப்படி என் மனதில் கவிதை சிந்திய ஒரு மாலைப் பொழுதைப் பற்றிய கவிதை இது!

அந்தித் துளி சிந்திச் சிந்தி
சிவக்கும் வானம்!
விண்மீன் தோன்றி
தந்திச் சுருக்காய் இரவைப் பாடும்!

அந்தித் தேன் வானமெங்கும்
சிந்தியதைச் சிந்தித்தேன்
சிந்தியதேன்?! - இது
யார் வந்துச் சிந்திய தேன்?!
கதிரோடு தங்கிய தேன்
இரவுக்கு முந்தியதேன்?!

கடுநஞ்சாம் பகற்பொழுது
அமிழ்தாம் இரவு!
இடையிற் தோன்றும்
அந்தித் தேனைக் காண்பது அரிது!

அலுவலுக்கு மத்தியிலும்
அந்தியைச் சந்தித்த அப்பொழுது
ஊனுக்குள் ஈருயிராய் இன்னும் பதிவு!

முன்பனிக் காற்று மோதிக் கலைகையில்
பூத்த மலர்போல் - நெஞ்சில்
மந்திரத் தொனியாக ஒலித்தபடி
அந்தித் தேன் வழியும்
இனி பா முழுதும்
அந்தத் தேன் தொட்டே - என்றும்
இனி உயிர் எழுதும்

1 comment: