Saturday, June 7, 2014

போகாத மரணம்!


ஓலம் கண்ணீர் மௌனம் ஒருபுறம்
புன்னகை களிப்பு கேளிக்கை மறுபுறம்
இதற்கிடையில் கிடக்கும் பிணத்தைப் போலே
விசும்பும் உண்மை மனம்!

யார் இறப்பிற்கோ சென்று வந்து
தலை முழுகிடும் உடல்
உடன் மறந்திடும் மனம்

சிந்திய கண்ணீர் காயும் முன்னே
எரியும் வயிற்றின் புகையில் மறையும்
காற்றில் பறக்கும் கிழவனின் சிதையாய்
தொலைந்து போகும் உறவின் நிழல்கள்

உண்ட நஞ்சு உள்ளிருந்து
ஊறி ஊறிப் புகை எழுப்ப
உறைந்துவிட்ட மனதின் ரணம்

மரணம்!

மொய்க்கும் ஈயை தட்டும் கைகள்
மறுக்கின்றன மரணத்தை!

No comments:

Post a Comment